
ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்குபெற்றார். 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரச்சார மேடையில் இறங்கிய சோனியா, முதல் உரையிலேயே பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
தனது பேச்சுதிறமையை குறித்து பிரதமர் மோடி பெருமிதப்படுவதை சுட்டிக்காட்டிய சோனியா காந்தி, "அவர் சொல்வது சரிதான். அவர் நடிகர் போல பேசுகிறார். அவருடைய பேச்சுக்களால் நாட்டின் பசி தீர்ந்தால் எனக்கு சந்தோஷம் தான். ஆனால், வெறும் பேச்சுக்களால் மக்களின் வயிறு நிறையாது. சாப்பாடு வேண்டும்" என்றார்.
மேலும், "வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீட்டை மத்திய அரசு கொடுத்தது. ஆனால், கர்நாடகத்திற்கு தான் மிகவும் குறைந்த இழப்பீடு கொடுக்கப்பட்டது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல" என்றார்.