Breaking

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தேவை, அன்புமணி ராமதாஸ்

நம்நாடு செய்திகள்
0
டெங்குக் காய்ச்சல் விகாரத்தில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டதால்தான் நிலைமை மோசமானது. பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கி விடாமல் உடனடியாக விழித்துக் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்குப் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்துவரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வழக்கம் போலவே, இதிலும் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15ஆம் தேதி வரை 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மராட்டியம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என்று அன்புமணி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 3244 பேரில் 2994 பேருக்கு இப்பாதிப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஏற்பட்டதாகும். அந்தக் காலகட்டத்தில் இந்தக் காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்திருந்தனர். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கடுமையான வெப்பநிலை காரணமாகக் கட்டுப்பாட்டில் இருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு பெண்மணி, கிருஷ்ணகிரியில் ஒருவர் எனக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது. இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மிகவும் தீவிரமாகப் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. பன்றிக் காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்த முடியும். நோய்த் தடுப்பு முறைகள், சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்டுக்கொரு முறை தடுப்பூசியும் போடலாம். பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதற்கான சோதனையை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்துகொள்ள வகை செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமை வார்டுகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அமைக்கப்படுவதுடன், காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கான டாமி ஃப்ளு மாத்திரைகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும்” என்று அன்புமணி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கேரளத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கத் தொடங்கியபோது அம்மாநில அரசு விழிப்புடன் செயல்பட்டதால் அங்கு நோய் பரவலும், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டது என்ரு சொல்லும் அன்புமணி, தமிழக அரசு மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டதால் தான் நிலைமை மோசமானது என்றார். “பன்றிக் காய்ச்சல் விஷயத்திலும் அதேபோல் உறங்கிவிடாமல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)