இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேற்று (மே.10) வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை தடுக்கும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பினாமி மூலம் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
குட்கா ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எண்ணி கவலைப்படவில்லை; இந்த வழக்கின் விசாரணையை எதிர்கொள்வோம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிபிஐ விசாரணை குறித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று பேசினார். ஆனால், நேரடியாக தமிழக அரசே மேல் முறையீடு செய்தால் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிப்பது அம்பலமாகிவிடும் என்பதால், சிவக்குமார் என்ற சுகாதாரத் துறை அதிகாரியைக் கொண்டு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது தமிழக அரசு.
மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ள சிவக்குமார், குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர்.
சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று நேர்நின்றவர் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆவார். முகுல் ரோத்தகியின் ஒரு நாள் கட்டணம் என்பது சிவக்குமாரின் இரு ஆண்டு ஊதியத்திற்கு இணையானது ஆகும். அவரை நெருங்கிப் பேசுவது கூட சிவக்குமரால் சாத்தியமில்லை.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து முக்கிய ஆவணங்களும் வருமானவரித் துறையிடம் உள்ளன. அதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவதும், தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் உறுதியாகிவிட்டது.
தமிழக ஆட்சியாளர்களின் இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில், சிபிஐ அதிகாரிகள் இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.